மழைக் காலத்தின் ஒரு
விடுமுறை நாளின் பிற்பகல் பொழுதில்
உன் வழக்கமான ஒரு ஊடலுடன் தொடர்கிறது
நம் அன்றைய காதல் கதை
அறை முழுவதும் பரவிக்
கிடக்கின்றன, மெதுவாய் உருகும்
மெழுகின் வெளிச்சமும்
நம் மௌனங்களும்...
நீ கோபமாய் இருப்பது தெரிந்து
வானம் அழுதது, மழையாய்.
உன் நிழலை சித்திரமாய்
சுவற்றில் வரைந்து கொண்டிருந்தது
மெழுகின் வெளிச்சம்.
அறையின் ஜன்னல் அருகே நின்றிருந்த
என் முகத்தில் மழைச்சாரல் தெறிக்க
மெதுவாய் கரைகின்றன என் மௌனங்கள்.
உன்னைத்
திரும்பிப் பார்க்கிறேன், நீ
இன்னும் உன் புறம்
காட்டி அமர்ந்திருந்தாய்.
அப்போது வீசிய ஒரு பலத்த காற்றில்
ஜன்னல் கதவுகள் படபடக்க
அனிச்சையாய் நீ என்னைப் பார்க்கிறாய்….
உன் பார்வை முன் மண்டியிடுகின்றன
என் ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் ….
உன் கோபம் போல் தான் நம் காதலும்,
எப்போது விழிக்கும் என்று
தெரியாது. திடீரென எழுந்து அருகில் வருகிறாய்.
என் கைகளைப் பற்றிக் கொண்டு மிதமான
ஒரு வெப்பம் உடலெங்கும் பரவ
மிருதுவாய் நீ முத்தம் இட,
நம் உடலெங்கும் பரவுகிறது காதல்
இப்போது மழை இன்னும் அதிகமாய் பெய்யத் துவங்குகிறது.
நம் முத்தத்தின் வெப்பத்தில் மெழுகாய்
கரையத் துவங்குகிறது, இந்த இனிய மழைப் பொழுது...
2 comments:
Kavithaikal ellam arumai nanbare!
Thanks Priya.
You too write a blog? Sorry I couldn't find your blog by clicking on your name.
Post a Comment