உன் உள்ளங்கைக்குள்
வியாபித்திருக்கிறது என் உலகம்..
உன் ஒற்றைப் பற்றுதலில்
மலர்ந்து விரியவும், சின்னதொரு
புறக்கணிப்பில் உடைந்து நொறுங்கவும்.
நேற்று நீ வீசிய ஒரு அலட்சியப் பார்வையில்
உடைந்து விழுந்த அதன் பாகங்களை
ஒன்றாய் சேர்த்துக் கட்டுகிறேன் எனக்கானதொரு
புதிய உலகத்தை, நீ இன்று மறுபடியும்
உடைப்பதற்கு..
எப்போதும் தோல்வியைத் தழுவுகிறேன்
உன் மௌனத்தைக் கலைக்கும் என் முயற்சியில்,
நாள் முடிவில் மீண்டும் தன் இயல்பிழந்து
உன் உள்ளங்கைக்குள் போய் சுருங்கிக் கொள்கிறது
என் உலகம், அடுத்த விடியலுக்காக..
No comments:
Post a Comment