Friday, July 3, 2009

காரணங்கள் எதுவுமில்லை

அப்போது தான் மழை பெய்து
நின்று போன ஒரு இரவு தன்
பாடலை ஆள்அரவமற்ற
வீதியில் மெலிதாய்
ஒலித்துக் கொண்டிருந்தது

வெளியில் குளிர் தாங்காமல்
என் அறை நுழைந்து என்னை
வருடிச் சென்ற காற்று
நினைவுபடுத்துகிறது, உன் விரல்களின் அரவணைப்பை..

உனக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது,
மௌனங்களை வேலியாக்கி உன்னைப்
பாதுகாத்துக் கொள்ள
என் விழி பிறந்து முகம்
அளந்த கண்ணீர் விட்டுச் செல்கிறது,
புறக்கணிப்பின் தடயங்களை என் முகமெங்கும்

நீ இல்லாத என் நாட்கள்
வீட்டுச் சுவரில் தேன் தேடும் ப்ளாஸ்டிக்
பட்டாம்பூச்சி போல் போலியானவை
என்று உனக்கும் தெரிந்திருக்கக் கூடும்

வெயிலின் தன்மை சற்றே குறைந்து
சூரியன் மறையத் தொடங்கியிருந்த
ஒரு இலையுதிர்காலத்தில் இந்தக்
காதல் முறிந்து விட்டது என்று சொல்லிச் சென்றாய்

நாம் பிரிந்ததற்கான காரணங்களை
அலசி, ஆராய எனக்கு விருப்பமில்லை
நாம் மீண்டும் சேர்வதற்கான காரணம் வேறு
ஒன்றும் இல்லை
நான் உன்னைக் காதலிக்கிறேன் என்பதைத் தவிர

No comments: