Tuesday, September 30, 2008

நீ முணுமுணுத்து கும்பிடும் அழகைக்
கெடுக்கும் விதமாய் மணி அடிக்கும் பூசாரியைக்
கோபமாய் அந்த சாமி சிலை முறைப்பது
போல் தெரிகிறதெனக்கு...

நெற்றியில் பூசி விட்டு கோயில்
தூணில் நீ தட்டி விட்டுப் போகும் திருநீற் திட்டில்
சாமி எழுவதாய் தெரிகிறது..

நீ கடித்து மிச்சம் வைத்த
தேங்காய் சில்லை திருட வரும்
எலியை விரட்ட ஒரு பூனையை அந்த இடத்திற்கு
அந்த பிள்ளையார் அனுப்பி வைப்பார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை நான்...

சாட்சிக்காரன் காலில் விழுவதை விட
சண்டைக்காரன் காலில் விழுவதே மேல் என்று தான்
நான் தினமும் அந்த ஆற்றங்கரைப் பிள்ளையார் காலில்
விழுந்து கும்பிட்டுச் செல்கிறேன், உன்னையும்
என்னையும் சேர்த்து வைக்கும் படி..

உனக்கு என்னைப் பிடிக்கும் என்பதை
அந்தக் கடவுளிடம் சொல்லி விடாதே அப்புறம்
கோபத்தில் திரும்பி உட்கார்ந்து கொள்வான், பாவம்
நம் ஊர் மக்கள்...

நீ சாமி கும்பிடும்
அழகைப் பார்க்கவே கோயிலுக்கு வருகிறேன், தினமும்..

இன்னும் கொஞ்ச நாள் போனால்
நீ வரும் நேரம் தான் நடை திறக்கும் நேரம்
என்று மாற்றச் சொல்லி அந்த பூசாரியைக்
கனவில் கடவுள் மிரட்டுவார் என்றே நினைக்கிறேன்..
எல்லோரும் மழையைத் தொட ஆசைபட்டால்
அந்த மழை மட்டும் உன்னைத் தொட்டுப் பார்க்க
விரும்புகின்றது, தெருவில் இறங்கி நடக்கும் போது
தூறலாய்த் தான் இருந்தது.. ஏனோ நனைந்து விட்டேன் உன்
வீட்டைக் கடக்கும் போது பெய்த கன மழையில்...!!

நனைய விரும்பும் குழந்தையாய் தெருவில்
அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது மழை..
அடக்க வரும் அன்னையாய் தடுத்து விடுகிறது உன் குடை...

மழை நேரத்தில் வீட்டுக்குள் வந்து
நீ கழற்றிக் காயப்போடும் ஆடையின் ஈரத்தின் வாசம்
காட்டிக் கொடுத்து விடுகிறது, மழைக்கு உன்னை எவ்வளவு
பிடிக்கும் என்பதை...

உனக்கு என்னைப் பிடிக்கும் என்ற
பொறாமையில் நான் நிற்கும் போது மட்டும்
இந்த மழை காற்றுடன் சேர்ந்து வந்து நம் வீட்டு
ஜன்னலைக் கோபமாய் அடித்து விட்டுச் செல்கிறது...

உன்னை மட்டும் இந்த மழைக்குப்
பிடிக்கும் என்பதால் நீ என்னுடன்
வருகையில் நான் குடை எடுத்துக் கொள்வதில்லை...

எனக்கு காய்ச்சல் என்றால்
இந்த மழைக்கு அப்படி என்ன சந்தோசம்..?!
நம் வீட்டுக்கு வெளியே இவ்வளவு மகிழ்ச்சியாக
நடனம் ஆடிக் கொண்டிருக்கிறது....

நேற்று உன்னில் நனைந்ததால்
அந்த மழைக்கு காய்ச்சல் வந்திருக்கக் கூடும்,
அதனால் தான் இன்று அது வெளியில் வரவில்லை போலும்..!!

நீ என்னைக் கட்டிக் கொண்டு தூங்குவதைப்
பொறுக்க முடியாமல் இடி, மின்னலைத் துணைக்குக்
கூட்டி வந்து என்னைப் பயமுறுத்தப் பார்க்கிறது ஆனால்
இடிச் சத்தத்தில் நீ இன்னும் இருக்கமாய் என்னைக்
கட்டிக் கொள்வதில் அந்த மழை இன்னும் சத்தமாய்
அழத் துவங்குகிறது..

"இந்த மழைக்கு வேற வேலை இல்லை,
எப்போதும் வெளியில் வரும் நேரம் பார்த்து பெய்கிறது" - சலிப்புடன் சொன்னாய்.
எனக்கு மட்டும் தான் தெரியும் அதற்கு
இது மட்டும் தான் வேலை என்று...

நம் வீட்டுப் பின்புறத்தில் மட்டும்
சேமிப்புத் தொட்டி இல்லாமலேயே மழை நீர்
சேர்ந்து விடுகிறது, உன்னை தினமும் பார்ப்பதற்காகவே...





உன் ஜாதகம் பார்க்க
உன் இதழ் ரேகையைப் பார்த்தால்
எல்லா இடங்களிலும் மன்மதனே இருக்கிறான் ...

என் பேனாவில் மை ஊற்றினால்
அது உன் மேல் உள்ள மையலை மட்டுமே
எழுதுகிறது, தீராமல்...

நீ புருவம் உயர்த்தி என்னை
சந்தேகமாய் பார்க்கும் அழகிற்காகவே
புதிது புதிதாய் பொய்களைக் கண்டுபிடித்துச்
சொல்கிறேன் உன்னிடம்...

"ஏன் என்னைக் காதலிக்கிறாய்?" - காரணம் கேட்டாய்
"ஏன் உன்னை நான் காதலிக்கக் கூடாது.?" - திருப்பிக் கேட்டேன்.
திருப்பி எதுவும் பேசாமல் போனாய்.. ஆனால் திரும்பிப்
பார்த்துக் கொண்டே தான் போனாய்...

Friday, August 29, 2008

உன் கால் பட்ட தேங்கிய
மழை நீரில் வானவில் வண்ணம்
தெரிகிறதெனப் பேசிக் கொள்கிறார்கள்,
நம் வீதி கடப்பவர்கள்...!!!
-------------------------------------------------------------

நீ காயப்போட்ட தாவணியில்
முந்தைய நாள் மழையில் ஒட்டிக்கொண்ட
மழைத் துளிகள், வெயில் ஏற, ஏற
உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு உன்
தாவணி நுனியில் தொங்கிக் கொண்டிருக்கின்றன...

Tuesday, August 26, 2008

உன் தாவணி காயப்போட்ட

கொடியில் பூக்களின் வாசம்..!!

தேன் தேடுகின்றன பட்டாம்பூச்சிகள்..!!

Monday, August 25, 2008

Low voltage-ல் துடிக்கும்

tube light போல் ,

என் இதயம் பட படக்கின்றது

அவளைப் பார்த்தவுடன்..!

Thursday, August 21, 2008

என் வீட்டு கடிகாரம்...



மாற்றம் நாம் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு வினாடியும் சந்திக்கும் ஒன்று. உலகில் மாறாத ஒன்று இருக்கிறது என்றால் அது நேரம் தான். உங்களுக்கும் சரி, எனக்கும் சரி ஒரு நிமிடம் என்பது 60 வினாடிகள் தான்.காலம் அதன் பாதையில் பயணித்துக்கொண்டே இருக்கிறது. நாம் தான் அதை சரியாக கண்டு கொள்வதில்லை...


நாம் எந்த வயதில் சரியாக மணி பார்க்க கற்றுக் கொண்டோம் என்று யாருக்காவது நினைவிருக்குமா??, எனக்கும் நான் எந்த வயதில் சரியாக நேரத்தைப் புரிந்து கொண்டேன் என்று தெரியவில்லை. ஆனால் எனக்கும், நேரத்திற்க்கும் இடையேயான சின்ன சின்ன நினைவுகளை இன்னும் மறக்கவில்லை.

எங்கள் கிராமத்து வீட்டில் இருந்த கடிகாரம் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.நீல நிறத்தில் சற்று பெரிதாய், நீளமாய் இருக்கும் அந்த கடிகாரம். அது இரு பகுதிகளாக பிரிக்கப்பட்டு மேல் பகுதியில் நேரத்தைக் கணக்கிட எண்களும், மணி காட்டும் முட்களும், கீழ் பகுதியில் கரண்டி வடிவில் ஒரு பெண்டுலமும் இருக்கும். வாரம் ஒரு முறை கடிகாரத்திற்கு சாவி கொடுத்து அந்த பெண்டுலத்தை ஆட்டி விட வேண்டும். என் அப்பா அந்த கடிகாரத்திற்கு சில நாட்களுக்கு ஒரு முறை சாவி கொடுப்பார். அவர் நாற்காலி மேல் ஏறி அதற்கு சாவி கொடுத்து இறங்கும் போது, அவர் ஏதோ ஒரு சாதனை செய்து விட்டு வருவது போல் அவரை வியந்து பார்த்துக் கொண்டிருப்பேன். எங்கள் வீட்டு கடிகாரம் மணிக்கொரு முறை ஒலி எழுப்பும். எட்டு மணி என்றால் எட்டு ஒலிகளும், பத்து மணி என்றால் பத்து ஒலிகளும் எழுப்பும் வகையான கடிகாரம் அது. அதன் ஒலியை கேட்பதில் அலாதி பிரியம் எனக்கு.


அந்த சமயத்தில் எங்கள் வீட்டில் புதிதாய் ஒரு டிவி வாங்கியிருந்தோம். அதில் வெள்ளி தோறும் ஒளியும்,ஒலியும் நிகழ்ச்சியைப் பார்க்க நிமிடங்களைக் கடத்துவது மிகவும் கடினமாய் இருக்கும். அப்போது எனக்கு சரியாக மணி பார்க்க தெரியாது. சமைத்துக் கொண்டிருக்கும் என் அம்மாவை அவ்வப்போது தொல்லை கொடுத்துக் கொண்டே இருப்பேன். அம்மாவும் இன்னும் இவ்வளவு நிமிடம் இருக்கிறது என்பார். நான் ஒன்றிலிருந்து எண்ண ஆரம்பிப்பேன். திடீரென்று இடையில் நிறுத்தி விட்டு "அம்மா,மணி ஆகி விட்டதா.?" என்பேன். அம்மா "இல்லை" என்பார்கள். மீண்டும் சலிப்புடன் எண்ண ஆரம்பிப்பேன். இப்படியே எனக்கும், நேரத்திற்குமான உறவு மெல்ல ஆரம்பித்தது.


அடுத்த வந்த நாட்களில் கடிகாரத்தின் சின்ன முள்,பெரிய முள்ளின் நிலையை வைத்து எப்படி மணி பார்ப்பது என்று கற்றுக் கொண்டேன்.சில வாரங்களுக்கு அடிக்கடிகடிகாரத்தை பார்த்து நான் சொல்லும் நேரம் சரியா என்று அடிக்கடி என் அம்மாவிடம் கேட்டுக் கொள்வேன். அடுத்த சில வருடங்களில் மணி பார்ப்பது ஒரு பழக்கமாய் மாறி விட்டது. நான் வளர்ந்தவுடன் நானே பல முறை எங்கள் வீட்டு கடிகாரத்திற்கு சாவி கொடுத்திருக்கிறேன். எவ்வளவோ நாட்கள் நள்ளிரவில் உறக்கம் கலைந்து எழும் போது அந்த கடிகாரத்தின் வினாடி முள் சப்தம் மட்டும் துணையாக இருந்திருக்கிறது. பின் ஒரு சில வருடங்களில் அந்த கடிகாரம் பழுதடைந்து விட்டது. வேறு சில கடிகாரங்கள் அந்த இடத்தில் வந்து போய் விட்டன. ஆனாலும் அந்த பழைய கடிகாரத்தின் வினாடி முள் சப்தத்தையும், அதன் ஒலியையும் அவைகளால் தர முடிவதில்லை.வெறும் நேரம் மட்டும் சரி பார்ப்பதோடு சரி. அந்த கடிகாரங்கள் இருக்கும் இடம் தெரியாமல் என் வீட்டில் இருக்கின்றன. இப்பொழுது அந்த கடிகாரம் எங்கள் வீட்டில் வாழவில்லை. ஒலி எழுப்பாத தன் உறுப்புகளுடன் ஏதாவது ஒரு காயிலான் கடையில் தான் இருக்க வேண்டும். இப்பொழுது எவ்வளவோ நவீன கடிகாரங்கள் வந்து விட்டன. நம் அவசர வாழ்க்கையில் பலர் தங்களது குழந்தைகளையே கவனிக்க நேரம் இல்லாத போது கடிகாரத்தையா கவனிக்க போகிறோம்.என் வீட்டு கடிகாரம் இப்போது இல்லையென்றாலும் அது எழுப்பிய ஒலிகளை இன்னும் எனக்குள் நினைத்துக் கொள்ள முடிகிறது.

நாம் காலத்தை தான் சரியாக பயன்படுத்தாமல் வீணடிக்கிறோம். நம் கடிகரங்களையாவது பாதுகாப்போம்.


Saturday, May 31, 2008


தொலை தூரத்தில்

ரயில் வரும் போதே

அதிரும் தண்டவாளத்தைப் போல,

உன்னைத் தெருமுனையில் பார்க்கும் போதே

அதிர்கிறது என் இதயம்...!!!



Friday, May 30, 2008




இடம் பெயர்தல்
எல்லோர் வாழ்விலும் தவிர்க்க முடியாத
ஒன்றாக மாறிவிட்டது...


படிப்பதற்கோ, வேலை பார்ப்பதற்கோ
ஏதோ ஒரு மொழி தெரியாத ஊருக்கும்
நம்மை தயார்படுத்திக் கொள்கிறோம்..!!

அவ்வப்போது நம் குடும்பத்தினரை, நண்பர்களை

நினைத்து விட்டு நம் அன்றாட வேலைகளைத் தொடர்கிறோம்...

புதிய இடத்தில் சில வசதிக் குறைவுகள் இருந்தாலும்

நலம் விசாரிப்புகள் மட்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது...

இடம்பெயர்தல் குற்றமில்லை...

ஆதி காலத்திலிருந்தே இடம்பெயர்தல் வழக்கத்தில் இருந்திருக்கிறது...

சில நேரங்களில் இடம்பெயர்தல் தண்டனைக்குரியதாய் தெரிகிறது...

காலத்தின் சக்கரங்கள் நம்மை எங்கெங்கோ

நகரச் செய்து விடுகின்றன...

காலத்தின் பயணத்தில் சேரும் இடம்

பயணிகளால் தீர்மானிக்கப்படுவதில்லை...

இதோ நானும் இடம்பெயரத் தயாராகி விட்டேன்...

என்னுடைய பயணமும் என்னால் தீர்மானிக்கப்படவில்லை...

வழித் துணைக்கு என்னுடன் எடுத்துச் செல்கிறேன்,

நாம் மகிழ்ச்சியாய் வாழ்ந்த நிமிடங்களின் நினைவுகளை...






அன்று
ஊரெல்லாம் மழை...
அந்த மழை நாளில் தான்
உன்னை நான் முதல் முதலாய் பார்க்க நேர்ந்தது..

வானவில் குடை பிடித்துச்
சென்றதில் ஆச்சரியம்...!!
மழைக்கு காளான்கள்
தான் முளைக்கும், எனக்கோ
காதல் முளைத்து விட்டது..!!

நானும் ஒரு குடையுடன்
உன்னைப் பின் தொடர்ந்தேன்..
உன் கால் படும் இடமெல்லாம்
மழை நீர் உறைந்து கொண்டிருந்தது..! அனேகமாய்
இன்று ஆலங்கட்டி மழை என்று வானொலியில்
அறிவிக்கக் கூடும்..!

உன் மேல் விழுந்து
மோட்சம் அடைய நினைக்கும் மழைத் துளிகள்
உன் குடை பட்டு
தெறித்து விழுகின்றன.

அவ்வப்போது நீ கூந்தல் விளக்க
குளிர் காற்று உன் கூந்தல் வாசனையை
திருடிக் கொண்டு ஓடுகிறது...
ரயில் இன்ஜின் பின் செல்லும்
பெட்டியைப் போல் உன்னையே
தொடர்ந்து வருகிறேன்...
கடைசியில் நம் ஊர்
நூலகத்தில் நுழைந்து விட்டாய்.
மழைக்கு ஒதுங்கியதாலோ என்னவோ
நூலகத்தின் சம்பிரதாயங்கள் மறந்து விட்டேன்..
உன் செய்கையைப் பார்த்த பின் தான்
என் வருகையைப் பதிவு செய்தேன்...

நூலகத்தில் நீ செல்லும் பகுதிக்கெல்லாம்
பின் தொடர்ந்தேன்... உன் கை பட வேண்டி புத்தகங்கள்
முன் வரிசையில் நிற்பது போல் தோன்றியது.!
நான் உன் பார்வை என் மேல் பட வேண்டிக் கொண்டிருந்தேன்...

இறுதியில் உனக்குப் பிடித்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு நீ அமர,

நான் என் கைக்கு கிடைத்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு
உனக்கு சற்று எதிர் இருக்கையில் அமர்ந்து கொண்டேன்...

உன் செவ்விதழ் விரல்களால்
நீ பக்கங்கள் புரட்ட என் மனம்
இங்கே புரண்டு கொண்டிருந்தது...

தற்செயலாய் பார்த்தேன், நூலகத்தின் மூலையில்
விட்டு வந்த நம் குடைகள் ஒன்றோடொன்று ஒட்டியவாறு..! அவற்றிற்கும் காதலோ..??

நேரமாகிவிட்டது என்று நினைத்தாயோ என்னவோ
திடீரென கிளம்பி விட்டாய்...
மழைத் தெருவில் நீ நடந்து மறைவதை
பார்த்துக் கொண்டிருந்தோம், நானும் என் குடையும் மழையில் நனைந்தபடி...

இப்போது மழை இன்னும் கொஞ்சம்
அதிகமாய் பொழியத் தொடங்கியது...!!

Thursday, May 29, 2008


வாழட்டும் எதிரிகள்..!!!

எதிரிகள் இல்லையெனில்

நமது பலம் உலகுக்கு தெரிவதில்லை...

கண்முன்னே வாழட்டும் எதிரிகள்,

ஒவ்வொரு வினாடியும்

நம்மை உயிர்த்தெழ வைக்க..!!

எத்தனை முறை விழுகின்றோமோ

அத்தனை முறை எழுவோம்....!!!

நாம் விழுவது வீழ்வதற்கல்ல,

மீண்டும் எழுவதற்கே,

தோல்விகளை மீண்டு வாழ்வதற்கே....!!!

உலகெல்லாம் நண்பர்கள் இருந்தால்

போர் புரிய முடியாது.

உலகெல்லாம் வாழட்டும் எதிரிகள்...

துணைக்குப் போரிட சில நண்பர்கள் மட்டும் போதும்....

உலகை வெல்வோம்...!!!

நீ

குடைக்குள் மழை அல்ல

குடைக்குள் புயல்....!!!



நான் உன்


உதட்டு மச்சமாய் பிறந்திருக்கலாம்...


உன் எச்சில் தின்றாவது


உன்னுடனே வாழ்ந்திருப்பேன்...

உன்னுடனே வாழ்ந்து இறப்பேன்....

கவிதை கற்க

கல்லூரிக்குப் போக வேண்டுமா என்ன..???

உன்னைக் காதலித்தால் போதாதா...???

Wednesday, May 28, 2008


நத்தை கொண்ட கூடாய்

எங்கும் செல்கிறேன்....உன்

நினைவுகளை சுமந்தபடியே....!!!

ஒரே தெருவில்
வசித்துக் கொண்டு
ஒவ்வொரு நிமிடமும்
உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்....

நமக்கு இடையிலான
இடைவெளியை
உன் மௌனத்தால்
நிரப்பி இருக்கிறாய்....

நான் தனிமையில்
உன் நினவுகளுடன்....

என் இதயக் குழந்தையைக்
கிள்ளி விட்டு
இப்போது எனக்கென்னவென்று
ஒதுங்கி நிற்கிறாய்....

மூட்டிவிடவே
நீ..!!
எரிவதற்கே
நான்..!!

Sunday, March 23, 2008


மழை....

"தமிழகத்தில் இன்று பலத்த மழை..!!"
செய்தி கேட்டு விட்டு,
தற்செயலாய் என் வீட்டுக்கு வெளியே எட்டிப் பார்த்தேன்.
உண்மை தான்..!!!
நீ வந்து கொண்டிருந்தாய்..!!!




தேவதைப் பகுதி...!!

உன்னை நினைத்தவுடன்
என் இதயத்தில் ரத்த ஓட்டம்
கூடுகிறது....முதலில்
இதயத்தில்ஒரு Board வைக்க வேண்டும்,
" இது தேவதை நடமாடும் பகுதி
மெதுவாகச் செல்லவும்"-என்று..........

GUNகள்...!!!

உன்
ஒரே பார்வையில்
என்னை சுட்டு வீழ்த்தி விட்டாய்....!!!
உன்னிடம் இருப்பது
கண்கள் அல்ல....
GUNகள்...!!!


தனிமை கொடுமையா?

"தனிமை அவ்வளவு கொடுமையா?" என்றாய்.
நான் உன்னைக் காதலிப்பது போலவே
நீயும் என்னைக் காதலித்துப் பார்
அப்போது புரியும் உனக்கு....



காத்திருக்கிறேன்

உனக்கு
காத்திருப்பதை விட
உனக்கான வார்த்தைகளுக்கு
அதிகம் காத்திருக்கிறேன்....!!!

பழைய,விறகு வெட்டி கதை...

கோடாலியைத் தவற விட்ட விறகு வெட்டி ஒருவன் நதியின் கரையில் அழுது கொண்டிருப்பான். அவன் முன் திடீரென ஒரு தேவதை தோன்றி தங்கக் கோடாலி ஒன்றை நீடுவாள். அதை வாங்க மறுப்பான் அந்த விறகு வெட்டி.

உடனே ஒரு வெள்ளிக் கோடாலியை அவனுக்குத் தருவாள் அந்த தேவதை. அதையும் தன்னுடையது அல்ல என்று மறுப்பான் அவன்.

இறுதியில் அவனது இரும்புக் கோடாலியை அந்த தேவதை அவனிடம் கொடுக்கையில் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொள்வான் அவன்.

அந்த விறகு வெட்டியின் நேர்மையில் மனம் மகிழ்ந்து மூன்று கோடாலியையும் அவனிடம் கொடுத்து விட்டு மறைந்து விடுவாள் அந்த தேவதை...

அப்படித்தான் நானும் ஒரு நாள் தனிமையில் அழுது கொண்டிருந்தேன்.
என் முன்னால் தோன்றினாள் என் தேவதை.!!

என்னை சில நொடிகள் உற்றுப் பார்த்தவள் "என் அழுகிறாய்??" என்றாள்.. அவள் குரலில் சற்றே கர்வமும், உரிமையும் தெரிந்தது. அவளிடம்

"என் இதயத்தைக் காணவில்லை" என்றேன். "உண்மையாகவா???" என்றாள்.

"என் இதயத்தின் மேல் சத்தியம்" என்றேன். திடீரென மறைந்து போனவள்,சில வினாடியில் மீண்டும் என் முன் தரிசனம் தந்தாள்.

"இந்த பிடி உன் இதயம்" என்றாள். உடனே அதை வாங்க கை நீட்டினேன். சட்டென என் கைகளைத் தட்டி விட்டாள்

"நீ இவ்வளவு பேராசைக்காரனா...!!! இது உன் இதயம் அல்ல.. என்னுடையது... இப்படி அடுத்தவர் இதயத்திற்கு ஆசைப் படுகிறாயே இது நியாயமா...?!?!" கோபமாய் கேட்டாள்...

"காதலில் இதயங்கள் மாறுவது தான் நியாயம்" என்றேன் அவளைப் பார்த்து...

சில நொடிகள் என்னையே முறைத்துப் பார்த்தவள் திடீரென மறைந்து விட்டாள், என் இதயத்தையும் அவளோடு எடுத்துக் கொண்டு....!!!


Love--undefined

Love என்ன city bus-ஸா
வடபழனி வழியா வரும்னு சொல்றதுக்கு...!!!
Love-லாம் SuperStar மாதிரி...
எப்போ வரும்,எப்டி வரும்னு
யாராலும் சொல்ல முடியாது. ஆனா
வர வேண்டிய நேரத்துல கரெக்ட்-ஆ வரும்....!!!
சில நேரம் Metro Water மாதிரி
வரக்கூடா நேரத்துல கூட வரும்......undefined...


தனிமை...

தனிமை கேட்டேன்,
இந்த உலகை மறக்க.....
நீயோ
எனக்கு உன்னைத் தந்து விட்டாய்...!!!
இப்போது நான்
என்னை மறந்துவிட்டேன்....!!!

மோட்சம்...

உன் உதடுகளின் பள்ளங்களில்
விழுந்து,உருண்டு, எழுந்து,
உன் எச்சில் தீர்த்தம் பட்டு
மோட்சம் அடையக் காத்திருக்கிறது
என் பெயர்...சீக்கிரம் கூப்பிடு...

valentines day....

பூமிக்கு வலிக்குமோ என்று
வழக்கம்போல் மென்மையாய் நடந்து வந்த உன்னை
வேகமாய் நெருங்கினேன்.
"ஏன் இப்பிடி பண்ற நீ? கொஞ்சமாவது அறிவிருக்கா உனக்கு?' என்றேன்.
ஏதோ தவறு செய்துவிட்டோம் என்று பயந்து போய்
'என்ன ஆச்சு? நான் என்ன பண்ணேன்?' என்று
பதட்டமாய் கேட்டாய்.
"இன்னைக்கு என்ன day....valentines day....
பசங்க எல்லாம் ரோஸ் கிடைக்காம அலையுறாங்க..
இப்பிடி ஒரு bouquet-ஏ தனியா வந்தா சும்மா விடுவாங்களா!!
சீக்கிரமா வீட்டுக்கு போய் கதவ பூட்டிக்கோ' என்றேன் .
அவ்வளவு தான்.....கையில் இருந்த குடையை ஓங்கினாய் என்னை அடிக்க..... "விடு ஜூட்...."

ஊர் சுற்றும் காதல்...

இன்று உன்னைப் பற்றி ஒரு கவிதை
எழுதியே விடுவது என முடிவு செய்தேன்..!
என் அறையின் ஜன்னல் பகுதி தான்
சரியான இடம் என்று
paper பேனாவுடன் ஜன்னல் அருகில் அமர்ந்தேன்..
உனக்காக
காடு, மலை, கடல்,ஆறு,
park, beach, காஷ்மீர், ஊட்டி,
யாரும் இல்லா railway station,
நெடுஞ்சாலை tea கடை, bike ல் ஒரு long drive
எல்லாம் கனவிலேயே போய் திரும்பி விட்டேன்...!!
இன்னும் கவிதை வந்த பாடில்லை...
நீ மட்டும் தான் நினைவில் இருந்தாய்...!!
வேறென்ன யோசிக்கலாம் என்று நினைத்த போது
உள் மனது திடீரென்று கத்தியது , முட்டாளே..!
அவளே உன் நினைவில் இருக்கும் போது
உனக்கு கவிதை எதற்கென்று..!!
நியாயம் தான்.........
Paper பேனாவை தூக்கி எறிந்து விட்டு
உன் நினைவில் இருக்கத் தொடங்கி விட்டேன்..!!

வானவில் பெண்..!!!

மழை தூறும் அந்த மாலை வேளையில்
விரைந்து கொண்டிருக்கும் கருப்புக் குடைகளின் நடுவே,
கையில் கலர் குடையுடன் என் அருகில் நடந்து வந்தாய்....
"என்ன மழை பெய்யும் நேரத்தில்
வானவில்லை கையில் பிடித்திருக்கிறாய்" என்றேன்..
"என்னிடம் ஏதாவது சொல்லவில்லையெனில் உனக்கு தூக்கம் வராதே.." என்று சொன்னாய் சின்ன வெட்கத்துடன் ...!!
என்ன அதிசயம்...!!!
உன் கையில் இருந்த வானவில்
மெலிதாய் உன் முகத்தில் படரத் துவங்கியது...!!!!



மழையின் கோபம்..!!!

உன்னை எப்படியும் நனைத்து விடும்
நோக்கத்தில் அந்த மழை
உன்னைத் துரத்திக்கொண்டே வந்தது..!!
நான் ஒதுங்கி நிற்பது கண்டு நீயும்
அந்த பேருந்து நிறுத்தத்தின் நிழற்க் குடையினுள்
நுழைந்து விட்டாய்..!!
நீ உன் குடையை மடக்க எத்தனிக்கையில்
அப்போது வீசிய பலத்த காற்றுடன்
உன் குடை அடித்துச் செல்லப்பட.....
உனக்குப் பிடித்த என்னை
அடிக்க முடியாத கோபத்தில் (!!) பாவம்...
தூரத்தில் உன் குடையை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தது
அந்த மழை...!!!



துளி துளியாய்...!!

உன் குடையில் இருந்த ஒரு
துளை வழியே உள்ளே நுழைந்து
உன்னை நனைத்து விட மழைத் துளிகளுக்குள் ஒரு போட்டி
நீ நான் என்று போட்டி போட்டு
ஒன்றையொன்று தள்ளி விட்டுக் கொண்டதில்
எதுவுமே உன்னை நனைக்கவில்லை
உன் வீடு வந்தவுடன் குடையை மடக்கி உதறி விட்டு
உள்ளே சென்றாய்...
பாவம் மழைத் துளிகள்
இன்னும் உன் வீட்டு வாசலிலேயே தவம் செய்கின்றன...!!!


மழைக் கவிதை..!!!

உன்னை நனைக்க முடியவில்லை
என்ற கோபத்தில்,
வழியில் போகிற அனைவரையும்
அடித்துவிட்டு செல்கிறது இந்த மழை...!!!

நீ குடை பிடித்து போவதில்
அந்த மழையின் அழுகை இன்னும்
கூடி கொண்டே போகிறது....
குடையை மடக்கி விடு...
இல்லை எனில் சீக்கிரம் வீட்டுக்கு போய் விடு...
உன்னால் நாங்கள் வீட்டுக்கு போக முடியவில்லை.....!!!